Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பிறகு அரசு பதவி; மக்களுக்கு சந்தேகம் வரும்: நீதிபதி தீபக் குப்தா கருத்து

மே 09, 2020 02:38

புதுடெல்லி: “உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் ஓய்வுக்கு பிறகு வேறு அரசு பதவிகளை பெறக் கூடாது. அப்படி பெற்றால், மக்கள் அதை சந்தேகக் கண்கொண்டுதான் பார்ப்பார்கள்,” என உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகாலம் நீதிபதியாக பணியாற்றி, கடந்த புதன்கிழமை ஓய்வு பெற்ற, தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தீபக் குப்தா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

சிறுபான்மையினர் உட்பட தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பாதுகாக்கும் பக்கம் உச்ச நீதிமன்றம் நிற்க வேண்டும். அவர்கள் சில விஷயங்களில் அரசாங்கத்துடன் உடன்படாததால் அவர்களின் உரிமைகளை பறிக்க முடியாது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநரானார். ரஞ்சன் கோகோய் இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிகழ்வுகள் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் பார்வையை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள தீபக் குப்தா, எனது பார்வையில், நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் உள்ளன. சில நியாயமற்ற காரணங்களால் நீதிபதிக்கு இந்த பதவி கிடைத்திருக்கலாம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். இன்றைய உலகில் ஏராளமான மக்கள் கொண்டுள்ள கருத்து இதுதான். இது பல சந்தர்ப்பங்களில் சரியாக இருக்கலாம், இல்லாவிட்டாலும் அது பொது மக்களின் கருத்து.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் பதவிகளை வகிக்க நான் விரும்புவதில்லை. பொதுவாக, அவர்கள் அத்தகைய பதவிகளை ஏற்கக்கூடாது. நான் அதை செய்ய மாட்டேன். இதுபோன்ற எந்தவொரு நிலையையும் நான் ஏற்க மாட்டேன். எனது மறைந்த நண்பர் அருண் ஜெட்லி நீதிபதிகளின் ஓய்வூதிய வயது உயர வேண்டும் என்று சொன்னார். ஆனால் அவர்களுக்கு ஓய்வூதியத்திற்கு பிந்தைய பணிகள் ஒதுக்கப்படக் கூடாது. குறிப்பாக அரசால் இதுபோன்ற பதவிகள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பிறகு கொடுக்கப் படக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

புத்திசாலித்தனமான நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஃபஸ்ல் அலி கூட ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் காலம் மாறிவிட்டது. கால மாற்றத்துடன், நீதித்துறை மீதான பார்வையும் மாறிவிட்டது. இருப்பினும், ஓய்வுபெற்ற நீதிபதிகளால் நிரப்பப்பட வேண்டிய சில பதவிகள் உள்ளன. அதில், ஒன்றுதான் தீர்ப்பாய நீதிபதிகள் வேலை. சில நீதிபதிகள் தீர்ப்பாயங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

பெரும்பாலான நீதிபதிகள் சமூக ஊடகங்களை கவனிக்கிறார்கள். அவர்கள் ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் தங்கள் தனிப்பட்ட கணக்குகளை வைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தங்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? மற்றும் அவர்கள் விசாரிக்கும் வழக்குகள் குறித்த கருத்துக்களை கவனிக்கிறார்கள். நானும் படிப்பேன், சில நேரங்களில், நான் அதை பார்த்து சிரிக்கிறேன். சில நேரங்களில், எனக்கு கோபம் வரும். ஆனால், நீதிபதியாக எனது முடிவுகளை பாதிக்க நான் அனுமதித்தது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்